தமிழ்ப் புத்தகாலயத்தின் நிறுவனர் திரு.கண.முத்தையா அவர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இரண்டாவது லெப்டினென்டாக பர்மாவில்
பணியாற்றினார் . யுத்தக் கைதியாக இந்தியா வந்தபின் ,ஜூன் ,1946இல் தமிழ்ப்புத்தகாலயத்தை நிறுவினார். வாசகர்களின் மனதில் தரமான இடம் கொண்ட 'தமிழ்ப்புத்தகாலயம்' மனித வள மேம்பாடு சம்பந்தமான நூல்களை வெளியிட்டு வருகிறது .
தமிழ்ப்புத்தகாலயம்
– பதிப்பகத்தின் கதை …
==============================================
சில உண்மைகளைத் தன்னடக்கம் கருதி முன்னோர்கள் பதிவு செய்யத் தவறுவது வருங்காலத்திற்கு நாம் செய்யும் தவறு என்பதாலேயே இந்த கட்டுரையை பதிவு செய்கிறோம்…
1958 -59 இல் சோவியத் யூனியன் இந்தியாவில் ரஷ்யன் நூல்களை வெளியிட
ஒரு திட்டம் கொண்டு வந்தது.
ரஷ்யன் எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடத் தூண்டுவதற்காக, இந்தியப் பதிப்பாளர்கள் விரும்பும் ருஷ்ய நூல்களை மொழிபெயர்த்து
வெளியிட ஆகும் செலவு முழுவதையும் சோவியெத் யூனியன் வட்டியில்லாக் கடனாகக் கொடுக்கும்.
பதிப்பாளர்கள் நூல்களை வெளியிட்டு விற்று முடிந்தபின் அசல் தொகையை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும்.
இந்தத் திட்டத்தைச் செயல் படுத்த மாஸ்கோவிலிருக்கும் ‘மெச்து நரோத் நயாகினிகா ‘
( மக்கள் பதிப்பு கழகம் ) வின் இயக்குனர் ஒருவர் வந்திருந்தார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் யோசனைப்படி அவர் தமிழ்நாட்டில் கூப்பிட்டுப் பேசியது ஆறு பதிப்பாளர்களைத்தான்
சென்னையை சேர்ந்த 5 பதிப்பகங்களும் வெளியூர் பதிப்பகம் ஒன்றும் இதில் அடக்கம் .
சென்னைப் பதிப்பாளர்களில் முதல் நால்வரும் இந்தத் திட்டத்தை ஏற்று நூல்களை வெளியிட முன்வந்தார்கள் . நான் மட்டும் மறுத்துவிட்டேன். அன்று மாலை அந்த ரஷ்யன் இயக்குனர் அவர் தங்கியிருந்த ‘ஏர்லயன் ‘ ஹோட்டலுக்கு என்னை வர வழித்து தனியாகப் பேசினார்.
” மற்ற பதிப்பாளர்கள் இதுவரை பிரபலமான ரஷ்ய இலக்கிய கர்த்தாக்களின்
சிறந்த படைப்புகளை (அரசியல் சம்பந்தமில்லாதவை ) மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள் . இப்போதும் அவர்கள் அந்த மாதிரி நூல்களையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் ரஷ்யாவின் அரசியல் தொடர்புடைய பல நூல்களையும் , கம்யூனிச தத்துவ நூல்களையும் விரும்பி வெளியிட்டிருக்கிறீர்கள் . இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் இன்னும் பல பெரிய நூல்களை வெளியிட முடியுமே . ஏன் மறுக்கிறீர்கள்?” என்று கேட்டார் .
அதற்கு நான் சொன்ன பதில் அவரைச் சிந்திக்க வைத்தது என்று நினைக்கிறேன் .
நான் ” இந்த நூல்களை நாங்கள் வெளியிட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிக்காகவோ , சோவியெத் யூனியனுக்காகவோ வெளியிடவில்லை . எங்கள் நாட்டு மக்களுக்கு அறிவு வளரும் என்ற நம்பிக்கையில் வெளியிட்டோம் . இப்போது உங்களிடம் பணம் பெற்றுப் புத்தகம் வெளியிட்டால் அது எங்களின் நல்ல நோக்கத்தைக் குறைத்துவிடும்” என்று கூறினேன். அவர் என்னுடைய கருத்தினை ஏற்றுக் கொண்டு மிகவும் பாராட்டினார். - என தனது நினைவுக்குறிப்பில் எழுதுகிறார் கண.முத்தையா.
தமிழ்ப்புத்தகாலயம் தாகம்