Image description

தமிழ்ப் புத்தகாலயத்தின்  நிறுவனர் திரு.கண.முத்தையா அவர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில்  இரண்டாவது லெப்டினென்டாக பர்மாவில்

பணியாற்றினார் . யுத்தக் கைதியாக இந்தியா வந்தபின் ,ஜூன் ,1946இல்  தமிழ்ப்புத்தகாலயத்தை நிறுவினார். வாசகர்களின் மனதில் தரமான இடம்  கொண்ட  'தமிழ்ப்புத்தகாலயம்' மனித வள  மேம்பாடு  சம்பந்தமான நூல்களை  வெளியிட்டு  வருகிறது .

Image description



தமிழ்ப்புத்தகாலயம் – பதிப்பகத்தின் கதை …

==============================================


                     சில உண்மைகளைத் தன்னடக்கம் கருதி முன்னோர்கள் பதிவு செய்யத் தவறுவது வருங்காலத்திற்கு நாம் செய்யும் தவறு என்பதாலேயே இந்த கட்டுரையை பதிவு செய்கிறோம்…

 
பதிப்பகத்தைத் துவங்கிவிட்டு பின் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இடையே …
 
இரு புத்தகங்களைப் பதிப்பிப்பதற்காகவே  உருவாக்கப்பட்ட பதிப்பகம் பற்றிய கதை இது...
 
பதிப்பகம் என்பது வெறும் வியாபாரமாகிப் போயிருக்கும் இவ்வேளையில் தமிழர்களைத் தலை நிமிரச் செய்த ‘தமிழ்ப்புத்தகாலய ‘ நிறுவனர் திரு.கண.முத்தையாவின் இலக்கியப் பணியை வெறும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
தேசப்பற்று, நேர்மை,சத்தியம்,உழைப்பு,இலக்கிய ஆர்வம் , அறிவுத் தேடல் ஒருவரை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
பதினாறு  வயதுவரை சக்கந்தி எனும் ஊரின் ஜமீன் வாரிசாய் செல்வச்செழிப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன்  சட்டென தனது  குலத்தொழிலான வட்டிக் கடையை விட்டு , வெளிநாடுகளில் செய்த வியாபாரங்களை எல்லாம் விடுத்து, இந்திய தேசிய  ராணுவத்தில், இந்தியாவின் விடுதலைப் போரில் பங்கு கொள்ளச் செய்தது. தனது படுக்கையைக் கூட எடுத்துவைத்துப்  பழக்கப்படாத அவ்விளைஞன் , போர் முனையில் துப்பாக்கி ஏந்தி இந்திய விடுதலைக்காக, நேதாஜியின் மிகநெருங்கிய படைவீரன் ஆனான். பணத்தை சேமிப்பதே முக்கிய தொழிலாக கொண்ட பாரம்பரியமிக்க சமுதாயத்தில் தோன்றியும்,போரில் தங்கக் கட்டிகளுக்குப்பதில்  துப்பாக்கி குண்டுகளுக்கு ஏங்கினான்.
போர்க்கைதியாக சிறையில் இருந்த பொழுதும் , தணியாத இலக்கிய தாகம் தீர்க்க ரகுலசாங்க்ரித்யாயனின் ‘பொதுவுடைமை தான் என்ன ?’ மற்றும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஆகிய இரு புத்தகங்களையும் தேடிப்படித்து, கருத்துக்களின் ஈர்ப்பால்  பின் தமிழில் மொழிபெயர்த்தார் .
 சிறையில் மொழிபெயர்ப்பது  அவ்வளவு எளிய காரியமா என்ன? 
அதுவும் 1945 – 46  களில்!…
 
 இவரின் எழுத்தார்வம் கண்ட சிறை அதிகாரியான ஒரு ஆங்கில காப்டனின் உதவியால் கையெழுத்துப் பிரதிகள் யாவற்றையும் சேதமின்றி இந்தியா கொண்டுவந்து சேர்த்தார் கண.முத்தையா . அப்படி அவர் இந்தியாவிற்குள் வரும்போது அவரிடம் பணம் ஏதும் இல்லை , கொல்கத்தா நகரில் அவரது இந்திய தேசிய ராணுவ உடையை பார்த்து பொது  மக்கள் வணங்கியபோதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் சுவாசத்தை அனுபவித்தார்,
 
அங்கிருந்து சென்னைக்கு பயணித்து, மொழிபெயர்த்த புத்தகங்களை வெளியிட துவங்கப்பட்டதுதான் ‘தமிழ்ப்புத்தகாலயம் ‘ .
 
 நூல்களை வெளியிட பணமும் இல்லாததால் நண்பரிடம் கடன் பெற்று முதலில் பொதுவுடைமை தான் என்ன? என்ற நூலையும் பின் வால்காவிலிருந்து  கங்கை வரை நூலையும் திரு ராகுல்ஜியின் அனுமதி பெற்று, வெளியிட்டார்.
 
அன்றைய கால கட்டத்தில் புத்தகம்பதிப்பித்தல் என்பது மிகக்கடுமையான  விஷயம், மொழி மீது கொண்ட காதல்,விடாமுயற்சி போன்றவையால் மட்டுமே திரு .முத்தையாவால் தமிழ்ப்புதகாலயத்தின் மூலம் சமூகப் புரட்சிக்கு
வித்திட முடிந்தது .
 
எத்தனை எதிர்ப்புகளையும்,போராட்டங்களையும் நேர்மை எனும் கேடயம் மூலமே எதிர்கொண்டு வெற்றிகொண்டார் திரு.முத்தையா ?
 
உதாரணமாக …  

1958 -59 இல்  சோவியத் யூனியன் இந்தியாவில் ரஷ்யன் நூல்களை வெளியிட

ஒரு திட்டம் கொண்டு வந்தது.

ரஷ்யன்  எழுத்தாளர்களின்  நூல்களை இந்திய  மொழிகளில்  மொழி பெயர்த்து வெளியிடத் தூண்டுவதற்காக, இந்தியப் பதிப்பாளர்கள் விரும்பும் ருஷ்ய நூல்களை மொழிபெயர்த்து

வெளியிட ஆகும் செலவு முழுவதையும் சோவியெத்  யூனியன் வட்டியில்லாக் கடனாகக் கொடுக்கும்.

பதிப்பாளர்கள் நூல்களை வெளியிட்டு விற்று முடிந்தபின் அசல் தொகையை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும்.

இந்தத் திட்டத்தைச் செயல் படுத்த மாஸ்கோவிலிருக்கும் ‘மெச்து நரோத் நயாகினிகா ‘

( மக்கள் பதிப்பு கழகம் ) வின் இயக்குனர் ஒருவர் வந்திருந்தார்.  இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் யோசனைப்படி அவர் தமிழ்நாட்டில் கூப்பிட்டுப் பேசியது ஆறு பதிப்பாளர்களைத்தான்

சென்னையை சேர்ந்த 5 பதிப்பகங்களும் வெளியூர் பதிப்பகம் ஒன்றும் இதில் அடக்கம் .

சென்னைப் பதிப்பாளர்களில் முதல் நால்வரும் இந்தத் திட்டத்தை ஏற்று நூல்களை வெளியிட முன்வந்தார்கள் . நான் மட்டும் மறுத்துவிட்டேன். அன்று மாலை அந்த ரஷ்யன் இயக்குனர் அவர் தங்கியிருந்த ‘ஏர்லயன் ‘  ஹோட்டலுக்கு என்னை வர வழித்து தனியாகப் பேசினார்.

”  மற்ற பதிப்பாளர்கள் இதுவரை பிரபலமான ரஷ்ய இலக்கிய கர்த்தாக்களின்

சிறந்த படைப்புகளை (அரசியல் சம்பந்தமில்லாதவை ) மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள் . இப்போதும் அவர்கள் அந்த மாதிரி நூல்களையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் ரஷ்யாவின் அரசியல் தொடர்புடைய பல நூல்களையும் , கம்யூனிச தத்துவ நூல்களையும் விரும்பி வெளியிட்டிருக்கிறீர்கள் . இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் இன்னும் பல பெரிய நூல்களை வெளியிட முடியுமே . ஏன் மறுக்கிறீர்கள்?” என்று கேட்டார் .

அதற்கு நான் சொன்ன பதில் அவரைச் சிந்திக்க வைத்தது என்று நினைக்கிறேன் .

நான் ” இந்த நூல்களை நாங்கள் வெளியிட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிக்காகவோ , சோவியெத் யூனியனுக்காகவோ வெளியிடவில்லை . எங்கள் நாட்டு மக்களுக்கு அறிவு வளரும் என்ற நம்பிக்கையில் வெளியிட்டோம் . இப்போது உங்களிடம் பணம் பெற்றுப் புத்தகம் வெளியிட்டால் அது எங்களின் நல்ல நோக்கத்தைக் குறைத்துவிடும்” என்று கூறினேன். அவர் என்னுடைய கருத்தினை ஏற்றுக் கொண்டு மிகவும் பாராட்டினார்.  - என தனது நினைவுக்குறிப்பில் எழுதுகிறார் கண.முத்தையா. 

                                                                                                                  

தமிழ்ப்புத்தகாலயம்    தாகம் 


Image description